Saturday, November 21, 2009

எப்போ விடியும்???

மழை விட்டும் தூவானம் விடலை என்பதைப் போல் மழை ஓரளவு குறஞ்சும் எங்க தெருவோட நிலைமை இது. தமிழ்நாட்டில் பல தெருக்களின் நிலைமை இதுதான் என்றாலும் அங்கே எல்லாம் சாலை போட்டும் இப்படி ஆகி இருக்கும். எங்க தெருவிலோ சாலை போடறதுனா என்னனு எங்களுக்கே மறந்துபோச்சு. இந்த அழகிலே பக்கத்து அடுக்குமாடிக்குடியிருப்பிலே அவங்க செப்டிக் டாங்க் தண்ணீரை வேறே இருபத்துநான்கு மணி நேரமும் மழைநீர் வடிகாலுக்குனு தோண்டிய கால்வாயில் விட்டுடறாங்க. துர்நாற்றம் தாங்கலை என்பதோடு கொசுக்களின் இம்சைவேறே. காலம்பர ஐந்து மணிக்கு வாசல் தெளிக்கப் போனால் கொசுக்களின் முற்றுகை, தெருவிளக்கு வேறே லேசாக் காத்தடிச்சாலே எரியாது. அந்த இருட்டு, தண்ணீரிலே குடிவந்த, குடி இருக்கும், குடிவரப் போகும் சுப்புக்குட்டிகள், அவற்றின் உணவான தவளை, பெரிய தவளை பார்த்திருக்கீங்களா? பச்சைநிறத்தில் ஒரு பூனைக்குட்டி சைசுக்கு இருக்கு. அதுவும் வந்துடும். இப்படி சகல ஜீவராசிகளின் துணையோடு தான் வாசல் தெளிப்பு. மர்மக் கதைகளில் வராப்பல திக் திக்னு இருக்கும். இதுக்கு என்னிக்கு விடிவு?

இந்த வாரம் இந்து தினசரிப் பத்திரிகையின் டவுன் டவுன் நியூஸ் பக்கத்தில் எங்க தெருவோட அழகையும், உள்ளாட்சித் துறை அமைச்சர், முதல் அமைச்சர்னு போய் முறையிட்டதையும் நாங்க சொல்லிப் புலம்பி இருக்கிறதைப் போட்டிருக்காங்க. ஏதோ இனியாவது விடிவு கிடைக்காதா என்ற நப்பாசைதான்!

Wednesday, July 29, 2009

சிதம்பரத்தில் தீக்ஷிதர் வழிபடும் நடராஜர்!

சிதம்பரத்திற்குப் போன மாசம் போனப்போ தீக்ஷிதர் வீட்டில் அவர் தினமும் வழிபடும் நடராஜரை அவர் அனுமதியோடு எடுத்த படம் இது. கொஞ்சம் யோசனையாவும், தயக்கமாவுமே இருந்தது எடுக்கலாமா, வேண்டாமானு. அப்புறமா கொஞ்சம் நிதானப் படுத்திட்டு எடுத்துட்டேன். கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கோ??? தெரியலை!

Sunday, July 12, 2009

நந்தி மறைக்குது!

எவ்வளவு பெரிய நந்தி??? நல்லா எடுத்திருக்கேனா?? அப்புறம் தன்னோட போஸ் சரியாவே வரலைனு நந்தி சொல்லும்! படம் எடுக்கிறதுக்குனு படிச்சுட்டு எடுக்கணும்! உள்ளே பிரகதீஸ்வரரை எடுக்க முடியாது, இப்போ. ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னாலே இந்தக் கோயிலில் உள்ளெ போய்ப் பார்த்துட்டு வரதுக்கே பயம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ இருக்கும். இப்போ என்னன்னா, ஒரே கூட்டம்! கூட்டம்!
தஞ்சாவூர்க் கோயிலில் உள்ளே நுழையும் முன்னர் உள்ள நந்தி மண்டபத்தின் முகப்பு இது. கிட்ட வைச்சு எடுத்தும், சரியா விழலை.

Monday, June 8, 2009

எஃபண்ட் பார்க்கிறீங்களா?

பெரிய கோயிலின் நுழைவாயிலில் நம்ம அருமை நண்பர். நம்ம வீட்டுக்குட்டி மழலைத் தலைவியின் மொழியில் எஃபண்ட்! அவங்க ரொம்ப ரசிச்சாங்க இவரை!
இது போன வாரம் எடுத்த தோற்றம். மூலஸ்தான கோபுரத்தின் ஒரு பக்கப் பார்வை!
நுழைவாயிலின் தோற்றம். இது 2005-ல் எடுத்தது. அநேகமாய்த் தஞ்சை செல்லும்போதெல்லாம் பெரிய கோயில் செல்லாமல் வந்ததில்லை, அல்லது பெரிய கோயில் பார்க்கவென்றே தஞ்சை செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

Monday, June 1, 2009

மீனாக்ஷி, எங்க ஊரிலே இருந்து யு.எஸ். போனாள்.

ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்தேன், இந்தப் படங்களை எல்லாம் எங்கே போச்சோன்னு. பார்த்தால் ஒரு மூலையில் கிடக்கு. பொறுக்கிச் சுத்தப் படுத்திப் போட்டிருக்கேன். ஹூஸ்டன் மீனாக்ஷியும், சுந்தரேஸ்வரரும். இந்தப் படம் எடுத்தது முதல் முறையா 2004-ல் யு.எஸ். போனப்போ. மீனாக்ஷி சின்னப் பொண்ணா இருப்பா பாருங்க.
அப்படியே நம்ம வீட்டிலே ஒருத்தரை நேரில் பார்க்கறாப்போல் இருக்காளா மீனாக்ஷி??? 2004-ல் போனப்போ மதுரைக்கார பட்டர் ஒருத்தரே இருந்தார். அதுக்கு அப்புறமா 2007-ல் போனப்போ அவர் இல்லை. தஞ்சை ஜில்லாவில் இருந்து குருக்கள், (சிவாசாரியார்) ஒருத்தரை நியமிச்சிருந்தாங்க. என்ன ஆனாலும் பட்டர் வழிபாட்டுக்கும், இவங்க வழிபாட்டுக்கும் வித்தியாசம் இருக்குமேனு தோணித்து. என்ன செய்யறது. மீனாக்ஷியின் ஏற்பாடு இது. நல்லாவே இருக்கட்டும் எல்லாரும். அவரும் பிழைக்கவேண்டாமா!

Friday, May 29, 2009

மீனே மீனே மீனம்மா!

வெள்ளி மீன்கள். வெளிச்சம் கொடுக்க முடியலை. என்றாலும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான், கவனிக்க, எடுத்தாச்சு. :D
மீனே மீனே மீனம்மா, விழியைத் தொட்டது யாரம்மா, தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா?

Tuesday, May 26, 2009

மல்லிகைப் பூவா? இட்லியா???? பொன்வண்டின் சந்தேகம்!

மெளலி வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை. அதைத் தோட்டத்தில் மாமரத்தடியில் உள்ள கல்லில் வைக்கச் சொன்னேன். மறுநாள் பார்த்தால் ஒரு பொன்வண்டு அதைப் பூவோனு நினைச்சு தேன் கிடைக்குமானு பார்த்துட்டு இருந்தது. உடனே ஒரு க்ளிக் எடுக்கணும்னு நினைச்சால் கிட்டே போகமுடியலை. ஓடிப் போயிடுது. வேறே வழியில்லைனு தள்ளி இருந்து ஜூம் பண்ணினால் பொன்வண்டைத் தவிர மத்தது வருது. என்னத்தைச் செய்ய? உற்றுப் பாருங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகே ஒரு கல்லில் இரண்டு இட்லியும், கொஞ்சம் கறுப்புக் கலந்த நிறத்தோடு ஒரு பூச்சியும் தெரியும். வேறே வழி இல்லை. கிட்டேப் போனால் பறந்து போயிடுது.

Monday, May 25, 2009

சுகமான தூக்கம்!

எங்க வீட்டுச் செல்லம் நாரத்தை மர நிழலில் தூங்கும்போது எடுத்த படம் இது. எப்படியோ படம் எடுக்கிறோம்னு தெரிஞ்சுட்டுப் போய் மறைஞ்சு கொண்டு விட்டது. கிட்டக்கப் போய் ஜூம் பண்ணி எடுக்கலாம்னா ஓடிப் போயிடறது. என்ன செய்ய?????? சரியா வரலை, ஆனால் அதை யார் விட்டாங்க? அடுத்து ஒண்ணு எடுக்கலாம்.

Wednesday, May 13, 2009

வானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்!

2007-ல் டிசம்பரில் அழகர் கோயில் போனப்போ அங்கே எடுத்தது இந்தப் படம். வானரக் கூட்டமே இருந்தது. எல்லாம் ஓடிப் போக இருந்தவை மட்டுமே கொடுத்த போஸ் இது!கீழே பாதையில் ஒரு வானரம் வந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டு சாலையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருந்ததுனு நினைக்கிறேன். கீழே ரயில் பாதை இருக்கும் படம் பழநி மலை மேல் செல்லும் ரயில் ஏறும் இடம். நாங்க போனப்போ விஞ்ச் இல்லை. ஆகவே மலைக்கு மேலே ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில் தான் செல்ல முடிந்தது. நடந்து போகத் தான் ஆசை. ஆனால் இரவுக்குள் எங்க அப்பாவின் ஊரான மேல்மங்கலம் போய்ச் சேரணும். ஆகையால் ரயிலில் சீக்கிரம் போகலாமேனு சிறப்புக் கட்டணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்தோம். அப்போ ஒரு நபருக்கு 50ரூ சிறப்புக் கட்டணம் ரயிலுக்கு. என்றாலும் ரயில் வருவதற்குப் பல மணி நேரங்கள் காத்துட்டு இருக்க வேண்டி இருக்கு. சிறப்புக் கட்டணம்னு வசூலிக்கிறாங்க. ஆனால் ரயில் பயணம் சிறப்பும் சரி, சாமானியக் கட்டணமும் சரி சேர்ந்து தான் பயணம் போக வேண்டி இருக்கு. சும்மா ஒரு பண வசூல் அரசாங்கத்துக்கு. கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுபட்டால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை!
அதே நாள் நாங்கள் மேலே செல்லும்போது (2007 டிசம்பரில்) பழநியில் எடுத்தது இந்தப் படம். மலை மேல் செல்லும் ரயிலில் உட்கார்ந்து செல்லும்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் இது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழநியிலே தான் சேருதுனு சொல்லுவாங்க இல்லையா? அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம்! படம் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டித் தான் இருக்கு. கதவுகளை நன்றாய் மூடிடறாங்க. ஜன்னல் வழியே தெரியும் காட்சிதான் எடுக்க முடியும். அந்த மலை ரயில் போகும்போது வெளியே நின்னு எடுக்கிறது ரொம்ப ஆபத்தானது. என்றாலும் எடுக்க முடியலையேனு தான் இருக்கு!

Sunday, May 10, 2009

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

ஹூஸ்டனுக்கு அருகே உள்ள கால்வெஸ்டனின் பறவைகள் பூங்காவில் எடுத்த படம் இது. வித விதமான பறவைகள். வித விதமான நிறங்களிலே. நிறங்களின் வண்ணக்கலவை படைத்தவனின் ரசனையைச் சுட்டுகின்றது. என்ன ஆச்சரியம், சிவப்பு நிறப் பெயிண்டால் கூட இவ்வளவு சிவப்பைக் கொண்டுவர முடியாது. கழுத்துக் கிட்டேயும், கால்களிலேயும் பாருங்க, இளஞ்சிவப்பு நிறம், அங்கே என்னமோ தண்ணீரை விட்டுத் துடைச்சு எடுத்தாப்போல நிறம் கொஞ்சம் மங்கிக் காண்கின்றோம். அதுவும் அந்த நிறச் சேர்க்கையில் செய்திருக்கும் அற்புதங்களைக் காணக் கண் போதாது. மீன்களின் நிறச் சேர்க்கை அதிசயிக்க வைத்தது. படங்களைக் காணோம். ஒளிஞ்சுட்டிருக்கு போல. இது தான் எனக்குப் புரியறதில்லை. பிறப்பின் ரகசியத்தைப் போல். நான் தேடறச்சே படமே சரியாக் கிடைக்கிறதில்லை.
ஆனால் என்னைத் தவிர வேறே யாருமே கணினி பக்கம் வரதும் இல்லை. அப்புறமா எங்கே போகும் படங்கள் எல்லாம்? சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா?? ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு???? தேடணும்! :(

Monday, April 27, 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

கும்பகோணத்திலே இருந்து தஞ்சாவூர் போய், அங்கே இருந்து மதுரை அழகர் கோயில் போகும் வழியில் கண்ட வயல்வெளிகள்.
அழகர் கோயில் செல்லும் பாதையில் எடுத்த படம் இது. வழியெல்லாம் என்ன குளுமை, என்ன குளுமை, கண்ணுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும், உடலுக்கும் குளுமைதான்.

Friday, April 24, 2009

திருச்செந்தூரில் !

திருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.

ஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்

இது ஹூஸ்டன் கால்வெஸ்டனில் எடுத்தது. கடலும் சரி, கடற்கரையும் சரி, எனக்கு என்னமோ இந்தியா தான் அழகுனு தோணுது. யு.எஸ்ஸில் மற்றக் கடற்கரைகளைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தானே. அந்த அழகே தனி. அடுத்த போஸ்டில் பாருங்க திருச்செந்தூர்க் கடலும், கடற்கரையையும்.

Tuesday, April 21, 2009

இரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது!

ஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல! என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும்?? கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.

Saturday, April 11, 2009

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு!

மதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.

ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
கொம்பானை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம்
பார்க்க வாங்கோ!" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது!

Sunday, March 1, 2009

பெருமாளே! உனக்கு இந்த கதியா? :((((((

என் மாமனார் காலம் வரையில் எங்கள் குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலின் வெளிப் பிரகாரம் நீங்கள் காண்பது. இந்தக் கோயிலின் இந்தக் கருங்கல் சுவர்கள் இங்கே இருந்த மற்றொரு மாடக் கோயில் ஆன லிங்கத்தடி சிவன் கோயிலின் இடிந்த மிச்சங்கள் என இந்தக் கற்களால் ஆன கல்வெட்டுகள் கூறுவதாய்ச் சொல்கின்றனர். இது பற்றித் தொல்பொருள் ஆய்வாளர்கள் தான் ஆய்வு செய்யவேண்டும். வலை உலக நண்பர் திரு ப்ளாஸ்டிக் சந்திரா மூலம் திரு சத்திய மூர்த்தி சென்று பார்த்து இதை உறுதி செய்திருக்கின்றார். எனினும் கல்வெட்டுகள் படிக்கப் படவேண்டும்.
கோயிலின் இன்றைய நிலையை இது சுட்டிக் காட்டுகின்றது. பெருமாளுக்கு அரை வேலிக்கு மேல் நிலம் உள்ளது. கருகமரத் தோப்பு உண்டு. ஆனால் பெருமாளுக்குத் தினப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகின்றார். விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல், பசிக்குச் சோறு இல்லாமல், மாற்றுத் துணி இல்லாமல், அபிஷேக ஆராதனைகள் இல்லாமல் பெருமாள் படும் கஷ்டம் தாங்க முடியவில்லை.
கோயிலின் பிரதான வாயிலின் நிலைமை. இன்னும் மழைக்காலத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் மாட்டுத் தொழுவமாகவும் பயன்பட்டு வருகின்றது.
பிரகாரத்தின் மற்றொரு பக்கம்.
இந்தக் கோயிலைப் புனருத்தாரணம் செய்ய ஆகாயத்தில் இருந்து கங்கையைக் கொண்டு வந்த அந்த பகீரதனைப் போலவே முயன்று கொண்டிருக்கின்றோம். முயற்சி வெற்றி பெற அந்தப் பரந்தாமன் தான் அருளவேண்டும். உலகையே காக்கும் அவனுக்குத் தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாதென்பதில்லை. மனிதர் இன்னும் எவ்வளவு கீழே இறங்க முடியும் என்று எடுத்துக் காட்டுகின்றான்.பிரதான வாயிலின் மற்றொரு தோற்றம். மூலவரின் தோற்றம். பொதுவாய் மூலவரைப் படம் பிடிப்பதில்லை. ஆனால் இங்கோ பெருமாள் தனக்கு வீடு மழைக்கு ஒழுகாமல், வெயிலுக்குக் காயாமல், தினம் ஒருவேளை சோறாவது வேண்டும் என்ற வேண்டுதலோடு நிற்கின்றார். பிச்சை எடுக்கும் நபர் நேரில் வந்தால் தானே கிடைக்கும்? ஆளை அனுப்ப முடியுமா? அனைவரின் உதவியினாலும், பிரார்த்தனையாலும் இவருக்கு ஒரு வழி பிறக்கவேண்டும். இப்போதைக்கு எங்களால் முடிந்தவரையில் தினமும் ஒருவேளை விளக்கேற்றி, நிவேதனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றோம். என்றாலும் வந்து வழிபாடு நடத்துபவர் ஒண்ணும் சந்நியாசி அல்ல. ஆகையால் கொஞ்சமாவது குத்தகைக்காரங்க மனசும் வைக்கணுமே? இப்போதைய அறங்காவலர் சரியாக அறத்தைக் காக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

Saturday, January 3, 2009

பாதை தெரியுது பார்!!!

கிராமத்துக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பாதை! கும்பாபிஷேகத்துக்காக கட்டிடவேலை நடந்துட்டு இருந்தது. சாமான்கள் இருந்தன. வேலை செய்யறதையும் சேர்த்து எடுக்க முயன்ற போது ஆட்களைக் காணவில்லை. செங்கற்களை மட்டுமே எடுத்தது.கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தயாராயிட்டு இருக்கும்போது எடுத்த படம் இது! கும்பாபிஷேகம் 2008 ஜூன் மாசம் முடிஞ்சாச்சு. போய் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்து கும்பாபிஷேகத்திலே கலந்து கொண்டும் வந்தாச்சு. அது தனி அனுபவம்.