Friday, December 31, 2010

நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!

 
Posted by Picasa
காரிலே போகும்போது தெரிந்த ஒரு காட்சியைப் படம் பிடிக்க நினைத்தால் காரின் வேகத்துக்கு என்னால் ஈடுகட்ட முடியலை. என்றாலும் இயன்றவரையில் நீலவானப் பின்னணியில் பச்சை வயல்களும், அதிலே கருநீலப் பின்னணியோடு கூடிய சாலையையும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் எடுத்திருக்கேன்.

வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!

Thursday, December 30, 2010

காய்களால், பழங்களால் அலங்காரம்!

பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்படும் சிதம்பரம் கோயிலின் கீழ வாசல். நடராஜர் என்னமோ தெற்கே பார்த்துட்டு இருந்தாலும் கீழவாசல் வழியாக வெளியே வந்து தேருக்குப் போவதாலும், அதே வாசல் வழியாக உள்ளே நுழைவதாலும் இதுவே பிரதான வாயிலாக அலங்கரிக்கப் பட்டது. எல்லா கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் தோரணங்கள் தொங்கினாலும் கீழவாசலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதைத் தவிர மற்ற நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தடா! :(

Monday, December 27, 2010

ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!


பகவான்

நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
தியான மண்டபம்.
பகவான் அண்ணாமலைக்கு வந்தபோது சிறுவனாக இருந்த நிலையில் எடுத்த ஓவியப் படம்.
தியானம் செய்யும் பெரிய கூடம்.

Sunday, December 12, 2010

உம்மாச்சி காப்பாத்தும்மா! :)

உம்மாச்சி காப்பாத்தும்மா.

Tuesday, November 30, 2010

கார்த்திகை தீபத் திருவிழா!


போன வருஷம் எடுத்த படம் இது. கார்த்திகைக்குப் போன வருஷம், பையர், மருமகள் எல்லாரும் இருந்தாங்க. அப்போ விளக்கு ஏத்தினதும் நிவேதனம் பண்ணிட்டு எடுத்த படம். அதான் நிவேதனம் எல்லாத்தையும் எடுத்து வைச்சாச்சு. ஹிஹிஹி. இந்த வருஷம் படம் எடுக்கிற மனநிலையில் இல்லை. சும்ம்ம்ம்மா விளக்கு ஏத்தினோம். போன வருஷ நினைவுகளோட இருந்தது தான் நிஜம்.

Sunday, September 19, 2010

சீதா கல்யாணமே வைபோகமே!

தூர்தர்ஷன் பாரதியில் தியாகராஜர் பற்றிய வரலாறு ஒரு டாகுமெண்ட்ரி காட்டிட்டு வராங்க. அநேகமா முடிஞ்சிருக்கும்.அப்புறமாப் பார்க்க முடியலை! கடைசியாப் பார்த்தன்னிக்குப் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும், அதிலே சாதிஞ்சனே பாட்டின் சரணத்தில் வரும் மாற்றம் பற்றியும் சொல்லிட்டிருந்தாங்க. தியாக ராஜர் பாடிய சில குறிப்பிட்ட பாடல்களையும், அது பாடப்பட்ட நேரங்களையும் நாட்டிய நாடகமாய்க் காட்டறாங்க. ஆடியது தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் குழுவினர். கேட்கணுமா ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும். அப்போ ஒரு நாள் இந்த "சீதா கல்யாணமே வைபோகமே" பாடலுக்கான காட்சிகளை சீதா கல்யாணமாக் காட்டினப்போ ராமராகவும், சீதையாகவும் ஆடினவங்க ஆடின ஆட்டம் ரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்லா இருந்தது. அதில் இருந்து சில காட்சிகளை இங்கே பார்க்கிறீங்க. இது மாலை மாற்றும் காட்சி.
சீதை ராமருக்கு மாலை போடுகிறாள். அதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடறாங்க பாருங்க. வீடியோ காமிரா இருந்தால் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கலாமேனு தோணிச்சு. அவ்வளவு அழகு!
மறு ஒளிபரப்பாவும் மறுநாள் காலம்பர நாலு மணியிலே இருந்து போட்டாங்க. ஹிஹிஹி, நாலு மணிக்கானு கேட்கறீங்களா?? நாலு மணிக்குத் தான் எழுந்துடுவேனே. உடம்பு சரியில்லைனால் கூட எழுந்துடுவேன். ரொம்ப மோசமாப் போய் அதுக்காக எடுத்துக்கும் இந்த மருந்து, மாத்திரைகள் தாக்கத்தால் தான் இப்போ ஒரு வாரமா ஐந்தரை மணி ஆயிடுது! :(

Saturday, September 4, 2010

ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க!

எப்புடி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்! :)))) கண்டு பிடிங்கப்பா ஆறு இல்லை, ஏழு, எட்டு, பத்து வித்தியாசங்களை. கீழே இருக்கிறது திவா சுத்தம் செய்து அனுப்பினது. மேலே இருப்பது நம்ம அமெச்சூர் ஒரிஜினல்.

Friday, September 3, 2010

தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்!

 
Posted by Picasa
பெளர்ணமிக்கு மறுநாள் எடுத்த படம் இது. எங்க வீட்டின் வலப்பக்கம் கிழக்கு. அப்போ உதயமாகிக் கொண்டிருந்த சந்திரன் இரண்டு தென்னை மரங்களின் இடைவெளி வழியே தெரிய, ரங்க்ஸ் என்னைக் கூப்பிட்டுக் காட்டினார். உடனேயே படம் எடுத்தேன். மாடிக்குப் போயிருக்கணுமோ?? :( கீழேயே இருந்தவாறு எடுத்ததில் பக்கத்து வீட்டு மாடியின் விளக்கு வெளிச்சத்தினால் சரியா வரலை. அதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு வரப் போயிட்டேன். அப்புறமா எடுக்க முடியலை! எடுத்தவரைக்கும் நல்லா இருக்கா, பார்த்துச் சொல்லுங்க.

Friday, August 6, 2010

நாரத்தையா, சாத்துக்குடியா??

தோய்க்கிற கல்லில் தோய்க்கும்போதெல்லாம் இந்த நாரத்தை/சாத்துக்குடி மரத்தில் துணிகள் மாட்டிக்கும். அப்போல்லாம் நினைச்சுப்பேன். அட, இது எத்தனை வருஷம் ஆச்சு? பூக்கவும் இல்லை, காய்க்கவும் இல்லை, கிளையை வெட்டிட்டால் தோய்க்கவானும் கஷ்டம் இல்லாமல் இருக்குமேனு. நேத்திக்கும் அப்படித் தான் நினைச்சுத் தோய்ச்சுட்டு இருந்தேனா, அங்கே ஒரு குயில்குஞ்சு காக்காய் கிட்டே தப்பிச்சுண்டு வந்து ஒளிஞ்சுண்டது. நிமிர்ந்து பார்த்தால் அந்தக் கிளையில் இரண்டு காய்கள் மாதிரி தெரிஞ்சது. நல்லாப் பார்க்கலாம்னு பார்த்தால் ஆஹா, நிஜமே தான், சந்தோஷம் பிடிபடவில்லை எனக்கு. குயிலோடு சேர்த்து இதையும் படம் பிடிக்கலாம்னு காமிராவை எடுத்துண்டு வரதுக்குள்ளே குயில் ஓடியே போயிருக்கு. காமிராவை வைச்சு ஜூம் பண்ணித் தான் எடுத்தேன். ஆனால் சரியா விழலை. வெயில் வேறே! வலப்பக்கமாப் பாருங்க பெரிய இரண்டு இலைக்குப் பின்னாடி இரண்டே இரண்டு காய்கள் தெரியும்.
இந்த இடத்தில் முன்னாலே பதினைந்து வருஷம் முன்னாடி ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அம்பத்தூரிலேயே ராம்நகர்னு ஒரு ஏரியாவில் குடி இருந்தப்போ தானாய் வந்தது. அங்கே இருந்து கொண்டு வந்து சில காலம் குடி இருந்த வீட்டில் வளர்ந்துட்டு அப்புறமாய்ச் சொந்த வீட்டில் அதே எலுமிச்சைக் கன்னை வைச்சோம். அதுவும் பூத்துக் காய்க்கவில்லை. அப்புறமா என்னோட அம்மா அந்த மரத்துக்குச் சந்திர கிரஹணத்தும்போது புட்டுப் போட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டாங்க. அதற்குச் சிலகாலத்துக்கு அப்புறமா எலுமிச்சை பூத்துக் காய்ச்சுச் சக்கைப் போடு போட்டது. ஒரு எலுமிச்சை சின்ன ஆரஞ்சி சைஸ் இருக்கும். அதுக்கப்புறம் ஒரு புயலில் கிளை ஒண்ணு முறிஞ்சு போகத் தெரியாத்தனமா அதை வெட்டிட்டோம். எலுமிச்சைக்கு இப்படிக் கிளையை எல்லாம் வெட்டினாச் சுத்தமாப் பிடிக்காது. ஆகவே அது அப்படியே உயிரை விட்டுவிட்டது. அதே இடத்தில் கொஞ்சம் தள்ளி இந்த மரம் வந்தது. இதுவும் பூத்துக் காய்க்காமல் இருக்கச் சென்ற வருஷச் சந்திர கிரஹணத்தின் போது நானும் புட்டு செய்து நிவேதனம் பண்ணினேன்.

இப்போப் பூத்துக் காய்ச்சிருக்கு. மனசெல்லாம் சந்தோஷம். நேத்தே இதைப் பகிர்ந்துக்கணும்னு நினைச்சால் கூகிள் தடை போட்டுப் பழிவாங்கவே அதிலே நேரம் போயிட்டது.

வழிமுறை: சந்திர கிரஹணத்தின் போது இரவில் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறு பெண்களை விட்டு மரத்தின் வேரில் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அதன் பின்னர் புட்டு செய்து மரத்துக்குப் படைத்து நிவேதனம் செய்வார்கள். இப்படிச் செய்தால் காய்க்காத மரம் பூத்துக் காய்க்கும் என்பது நம்பிக்கை.

Monday, July 26, 2010

அழகான அரசலாறு அலங்கோலக் காட்சியில்!

 என்னடா பசுமையா இருக்கேன்னு பார்க்கறீங்களா? பூமித்தாய் தன்னை ஒட்ட ஒட்டச் சுரண்டியும் இன்னும் தன்னிடம் இருக்கிறதை எல்லாம் இதோ இருக்கு எடுத்துக்கோ, எடுத்துக்கோனு ஆசையாக் கொடுத்துட்டுத் தான் இருக்கா. நாம தான் அதைப் புரிஞ்சுக்காமல் அவளை மேலும் மேலும் உறிஞ்சிக்கொண்டு இருக்கோம். இது கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி வழியாகப்பூந்தோட்டம் செல்லும் பாதையில் உங்க கூடவே வரும் அரசலாறு. கன்னிமாடத்தில் கொண்டு விடப் பட்ட அழகான இளவரசியைப் போல் நளினமாகவும், அழகாகவும், மென்மையாகவும், ஆரவாரமின்றியும் ஓடிக்கொண்டிருந்தாள் ஒரு காலத்தில். மழைக்காலங்களில் காவேரியில் பூரணப் பிரவாகம் எடுக்கும்போது கூட இவள் எந்தவித ஆவேசமும் இன்றி அமைதியாகப் பயணிப்பாள். இன்றைக்கு இவளிடம் மிச்சமிருக்கும் அழகு இதுதான்.
 
Posted by Picasa
கயவர்களிடம் அகப்பட்டுச் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணைப் போல் இந்த அரசலாறும் மக்களால் பலவிதங்களிலும் சீரழிக்கப் பட்டு மண்மேடுதட்டி, ஆங்காங்கே பார்த்தீனியமும், ஆகாயத் தாமரைகளும் படர்ந்து செழிப்பாக வளர்ந்து நிற்க, பயந்து, பயந்து எங்கேயோ ஒரு ஓரத்தில் ஓடுகிறாள். பொல்லாத கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட பெண், கூடத்தில் இருக்கும் கோபக்காரக் கணவனை சமையலறையில் இருந்து எட்டிப் பார்ப்பதைப்போல் என்னிடமும் இன்னும் கொஞ்சமானும் ஈரம் இருக்குனு காட்டும் வகையில் ஓடுகிறாள். கண்ணிலே ரத்தம் வருது ஒவ்வொரு முறை பார்க்கும்போதும். என்ன கொடுமை இது?
 
Posted by Picasa
ஒரு காலத்தில் இவள் மேல் கட்டப்பட்ட மூங்கில் பாலத்தில் கவனமாக அடியெடுத்து வைத்து நடக்கவே உள்ளூர ஆசையாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கும். மழைக்காலத்தில் மாட்டு வண்டிகளை நதியில் இறக்கிவிட்டுட்டு, வண்டியை அவிழ்த்துவிட்டு, மாடுகளைத் தண்ணீரில் ஓட்டி, அக்கரைக்குச் செலுத்துவார்கள் என் மாமனாரும், என் கணவருமாக. நானும், குழந்தைகளுமாக மூங்கில் பாலத்தில் நடந்து அக்கரைக்குச் செல்வோம். ஆங்காங்கே குடி இருக்கும் வீடுகளில் இருக்கும் பண்ணையாட்கள் உடனே ஓடி வந்து வண்டியை மெதுவாக இழுத்துப் போய் அக்கரையில் கரை ஏறி இருக்கும் மாடுகளைப் பூட்டி வண்டியைத் தயார் செய்வார்கள். இப்போ மூங்கில் பாலமே இல்லை. கல்பாலம் வந்தாச்சு, பேருந்துகள் ஓடுகின்றன. சிற்றுந்துகள் எனப்படும் மினி பஸ்களும் ஓடுகின்றன. கிராமங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இவை எல்லாம் தேவைதான். ஆனால் நதியில் உள்ள தண்ணீர் எங்கே போச்சு? சரி அதுதான் இல்லை, போகட்டும், மழைக்காலத்தில் ஓடி வரும் தண்ணீரையாவது சேமிக்கும்படியாக பார்த்தீனியச் செடிகளும், ஆகாயத் தாமரைக்கொடிகளும் அகற்றப்பட்டு மேடுகள் கரைக்கப் பட்டுத் தூர் வாரி இருக்கின்றனரா? அதுவும் இல்லை. வரும் கொஞ்ச நஞ்சத் தண்ணீரும் கடலுக்குள் சென்றுவிடும். கிடைக்கும் தண்ணீரைப் பத்திரமாகப் பாதுகாக்க முடியாமல் அடுத்தவங்களைக் குறை சொல்லி என்ன பயன்?

வேலைக்கு உணவு திட்டத்தில் வேலை வாங்கிட்டு உணவும், பணமும் கொடுக்கிறதாய்ச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ இந்த வேலையும் ஒரு வேலைதான் என்று கணக்கிலேயே எடுத்துக்கமாட்டாங்களா? இது முக்கியமில்லையா? எனக்குத் தெரிஞ்சு ஆற்றில் தண்ணீர் ஓடிப் பார்த்திருக்கேன் என்றால் இப்போக் கடந்த முப்பது வருடங்களாக இப்படி வறண்ட ஆற்றையே பார்க்கிறேன். இது என்ன நியாயம்? இது என்ன அலட்சியம்? ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் இதை எல்லாம் பார்க்கப் பார்க்க மனசும், உடம்பும் கொதிக்கிறது தான் மிச்சம். இதிலே விவசாய நிலங்களை எல்லாம் வீடுகள் கட்டவேண்டி ஒதுக்கிட்டும் வராங்க. விவசாயம் இல்லைன்னா எப்படிச் சாப்பிடப் போறோம்? இது கிராம மக்கள் அவங்களாவே தங்களுக்குள்ளாக செய்து கொள்ளவேண்டிய ஒரு வேலை. அதை எடுத்தாவது சொல்லலாமே?

Wednesday, June 23, 2010

பார்த்த சாரதி, உன்னைப் பார்த்த சாரதி!

மே மாதம் பதினேழாம் தேதியன்று எதிர்பாராமல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் பார்க்கணும்னு நம்ம ரங்க்ஸுக்கு ஆசை வர, சரினு ஒரு வண்டி ஏற்பாடு செய்துண்டு மத்தியானமா நாலு மணிக்கு மேல் கிளம்பிப் போனோம். உள்ளே மூலவரைப் பார்த்தாச்சு. ஆனால் அவர் பார்க்க விரும்பினது பார்த்தசாரதியை. அவர் ஜம்முனு உற்சவத்துக்குக் கிளம்பிட்டார். முன்னாடி மண்டபத்தில் இருப்பார்னு சொன்னாங்கனு அங்கே போனால் வீதிவலம் கிளம்பிட்டார்.

ஓட்டமாய் ஓடிப் போய்ப் பிடிச்சோம் அவரை. இந்த இரண்டு வெள்ளைக்குடைகளும் திருவல்லிக்கேணி கோயிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வாண்டுப் பயல்கள் தங்கள் சேமிப்பில் இருந்து பெருமாளுக்காகச் செய்து கொடுத்தது. மொத்தம் நாலு குடைகள் பண்ணிக் கொடுத்திருக்காங்க பசங்க, அன்னிக்கு உற்சவத்தில் இரண்டு குடைகள் மட்டுமே எடுத்துட்டு வந்தாங்க. பசங்க இன்னும் பெரிய பெரிய திட்டங்களெல்லாம் அவங்க சேமிப்பிலிருந்து செய்யறதுக்கு வச்சிருக்காங்க. படம் எடுக்கப் போனால் கிட்டே போய் எடுக்க முடியலை. சரினு இந்த மட்டும் தள்ளி நின்னாவது எடுக்க விட்டாங்களேனு எடுத்தாச்சு. கோபுரம், முன் மண்டபம் எல்லாமும் எடுத்திருக்கு. ஆனால் அந்தப் படங்களைக் காணோமே?? எங்கே போச்சு?? ம்ம்ம்ம்ம்?? தேடணும். இந்த ஓ.எஸ். மாத்தினதிலே எது எங்கே இருக்குனு ஒண்ணுமே புரியலை. everything is upside down! :P

Thursday, June 10, 2010

ஆனை பாருங்களேன்!


மனசே சரியில்லாமல் இருக்கறச்சே ஆனையைப் பார்த்தாலே ஒரு குஷிதான். தஞ்சாவூர்க் கோயிலில் எடுத்தது.

Friday, April 30, 2010

ராமலக்ஷ்மி போட்ட மேக்கப்!

நான் வெளியிட்ட படத்துக்கு ராமலக்ஷ்மி மேக்கப் போட்டு எனக்கு அனுப்பி வச்சிருந்தார். அதை வெளியிட்டிருக்கேன். இரண்டுக்கும் உள்ள ஆறு வித்தியாசம் இப்போச் சொல்லியாகணுமாக்கும்!

நாங்க தங்கின வீடு!

இதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.
என்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க! காப்பாத்துப்பா!

Monday, April 26, 2010

விட்டு விடு கறுப்பா!

என்னோட அப்பாவின் ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையோரம் இருக்கும் படாளம்மன் கோயிலில் உள்ள கறுப்பண்ண சுவாமி. இவரைப் படம் எடுக்கணும்னு பையர் சொன்னதும் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மாவே இருந்தது எனக்கு. அப்புறமா பூசாரி கிட்டே கேட்டோம். தாராளமா எடுக்கலாம்,அப்படினு உத்தரவு கொடுத்தார். படாளம்மனை மட்டும் எடுக்க முடியலை. அவளோட தர்பாரில் இவர் முக்கிய சேனாதிபதி! அபிஷேஹம் கிடையாது இவருக்கு. எங்க வீட்டுக் கல்யாணங்களில் முதல் பத்திரிகையை இவருக்குக் கொடுத்துடணும். இல்லாட்டிக் கோவிச்சுப்பார். அதுவும் பாக்கு, பழம் வைச்சுக் கொடுக்கணும். என் கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணா, தம்பி கல்யாணங்களிலே கொடுக்க முடியலைனு அம்மா கடைசி வரையிலே சொல்லிண்டே இருந்தா. இப்போ வருஷா வருஷம் போயிட்டு வராங்க அண்ணா, தம்பி குடும்பத்தோடு. எங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை இருந்ததால் நிறைவேற்றப் போனோம்.
படாளம்மன் கோயிலின் ஒரு பக்க நுழைவு வாயில். அந்தப் பக்கம் தெரியறது வராஹ நதி. நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் நுழைஞ்சுடும். இத்தனைக்கும் கோயிலில் இருந்து நதிக்குப் போகும் படித்துறையில் இருபது படிகளுக்கும் மேல் இருக்கு. மேல்படி அரை அடி அகலமே. கொஞ்சம் கால் வழுக்கினால் கீழே வராஹ நதிக்கரையோரம், புறாவே உந்தன் நினைவில்னு பாடிட்டுப் போகணும்! என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க! பசும்பால் தான் அந்தப் பக்கமெல்லாம். மாடெல்லாம் சின்னதாய் இருந்தாலும் அருமையான சுவையோடு கூடிய பாலை நிறையத் தரும்.

Thursday, April 22, 2010

வராஹ நதிக்கரையோரம்!

2007-ம் வருஷம் டிசம்பரில் ஆறுபடை வீடுகளுக்குப் போனோம். அப்போ என்னோட அப்பாவின் பூர்வீக ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிப் போனோம். அங்கே இருந்த படாளம்மன் கோயில் வராஹ நதிக்கரையோரம் உள்ளது. கோயிலின் ஒரு வாசல் வழியாக நதியில் இறங்கும்படி இருக்கும். நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் வந்துடும். இது நாங்க முதல்லே போகறதுக்காகத் தொலைபேசியில் சொன்னப்போ கோயிலுக்குள்ளே வெள்ளம் இருக்கு வடியட்டும்னு சொன்னாங்க. வடிஞ்சு நாலு நாள் கழிச்சுப் போனோம். அப்போவும் நதியில் தண்ணீர் இருகரையும் தொட்டுக்கொண்டு போனது. இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே. மாடுகளுக்குப் பறிச்சுட்டுப் போற பசும்புல்லைப் பார்த்தாலே பாலின் சுவை நாக்கில் ஊறும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். கொடைக்கானல் சில கிலோமீட்டர்கள் தான்.

Sunday, April 4, 2010

பூ, பூவாப் பூத்திருக்கு!

இந்த வாழைப்பூவைப் பார்த்தீங்களா?? இது வாழை மரத்தின் கன்று என நினைச்சு இலைகளை எல்லாம் வெட்டி விட்டதும் ஏற்கெனவே வந்த கண்ணாடி இலையில் இருந்த பூ. மினி வாழைப் பூ. மிக மிகச் சின்னது. ஒரு சாண் கூட இல்லை. கிட்ட வச்சுப் படம் எடுத்தேன். படம் எடுத்தும், காய்கள் வந்தும் ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு. போட முடியலை. சின்னக் காய்கள். குழந்தையின் விரல்கள் போல. மரத்தின் இலைகளைச் சீய்த்து விட்டும், விடாமல் தன்னுள்ளே இருந்த கருவை வெளிக்கொணர்ந்து விட்டது.
மிக மிகச் சிறிய இந்தப்பூவின் அளவையும், காய்களின் அளவையும் பார்க்கிறச்சே அவசரப் பட்டுத் தப்பாய் வெட்டிட்டாரோனு மனசு சங்கடப் பட்டது. இந்தப் பூவோ, காய்களோ பயன்படாது. இப்போ இந்த மரத்தையே வெட்டியாச்சு. இலைகளை வெட்டினதும் பூமியில் இருந்த இந்தக் கன்று அழுகிவிட்டதுனு நினைச்சு அடியோடு வெட்ட இருந்த வேளையில் பூவும், காயும் வந்து கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்தது. :(